திங்கள், 29 டிசம்பர், 2025

பாலையில் நீரூற்று நீ எனக்கு.

என் இதழ் பட்டு நீர் நஞ்சானால்

நான் மரித்துப் போவேன்.

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

 வாழ்தல் என்பது

கரிக்கும் கடல்நீர் அருந்துகையில்

அதில் இனிக்கும்

சுனைநீர்ச் சுவை உணர்தல்.


முத்தம் ஒரு நித்ய மலர்.

நாம் முத்தமிடுகையில்

யாரில் உதிர்ந்து

யாரில் பூக்கின்றன

இந்த நித்ய மலர்கள்?



ஞாயிறு, 14 டிசம்பர், 2025

 இந்த இரவில் ஏன் 

மண்மீது உதிர்கிறாய் மரமல்லியே?

உலராத கண்ணீர்துளிகளென 

உனைக்கண்டு திக்கென்கிறது என் மனம்.

உன்னைத் தொட்டெடுக்கையில் நடுங்குகின்றன என் விரல்கள்.

உன்னில் எஞ்சியிருக்கும் வாசம்

என்னிடம் சொல்வதுதான் என்ன?

மண்மீது வாழ்ந்து வீழ்ந்து 

மரித்துப் போதல் சுகந்தமென்றா?



செவ்வாய், 9 டிசம்பர், 2025

 இரவெல்லாம் தோய்ந்து தோய்ந்து

உதிரும் ஓர் பனிமுத்து.

மௌனம் சேர்ந்து மௌனம் சேர்ந்து

பெருகும் ஓர் பெருமௌனம்.

சிறிது சிறிதாய் தீண்டித் தீண்டி

நீ ஏற்றிய குளிர் தீபம்.

பிறை பிறையாய் வளர்ந்து

இன்று வானில் 

தனித்து எரியும் பூர்ண நிலா.