திங்கள், 2 பிப்ரவரி, 2026

நடுவானில் முழு நிலா 

ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.

அதனடியில் தனித்து நிற்கும்

அத்தி மரத்தில் பழங்கள்

சிவந்து கனிந்து உதிர்கின்றன.

இந்நள்ளிரவில் மென் குளிர் காற்றில்

சிறு வெண் மலர்கள் 

மலர்ந்து மணம் வீசுகின்றன.


சிவந்து கனிந்து உதிர்ந்த

ஒரு அத்திப்பழத்தை கையிலெடுத்து

உன்னிடம் பிளந்து காண்பிக்கிறேன்.

நூறுநூறு விதைகளில் உறங்கிக் கொண்டிருக்கின்றன

நான் இன்னும் சொல்லாத சொற்கள்.

நீயோ, சே! நல்லாவே இல்ல!

என்று சலித்துக் கொள்கிறாய்.


நாம் அருகிருக்கும் காலத்தை கடித்துத்தின்று

படபடத்து பறக்கின்றன

கருநிழல் வௌவால்கள்.

விரைந்து அருகும் அக்காலம் 

எண்ணிச் செய்வதறியாமல்,

நூறுநூறு விதைகளின் துயில் களைத்து 

இந்நள்ளிரவில் நான் இயற்றிய

சிறு வேள்வி அது!



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு